நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் நீரிழிவு நோய்!

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாக பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகிறது. இதன் காரணமாக பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய் விடுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும்போது அவை பாதங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதன் மூலம் பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்து காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளை தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும்.

தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காக சிறப்பு காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீரிழிவு என்பது தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே, விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தை குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். கால்களில் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.