எலும்புகளை வலுவடையச் செய்து உடலுக்கு வலிமை தரும் முளைக்கீரை..!

நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு கீரையே சேர்த்துக்கொண்டால் நோயின்றி வாழலாம் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முளைக்கீரை உடல் வலிமை தரும் கீரையாகும். இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை உண்ணலாம். தண்டுக்கீரையின் இளம் செடியே இளஞ்செடியே முளைக்கீரையாகும். இதனால் இளங்கீரை என்ற மற்ற பெயரும் இதற்கு உண்டு.

முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். வருடம் முழுவதும் வளரக்கூடிய முளைக்கீரை அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி வளரும் தன்மை கொண்டது. கால்சியம் சத்து நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி, வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன..

எலும்புகள் வலுவடையும்

முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.

வயதானவர்கள் இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.

மாலைக்கண் நோய் குணமடையும்

முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000 / IU ( அகில உலக அலகு ) வைட்டமின் A உள்ளது. இது மாலைக்கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும்.

இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதனால் குணமாகும்.